பெங்களூருவில் அடை மழை: சுவர் இடிந்து விழுந்து எழுவர் பலி!
இந்தியா, பெங்களூருவில் நேற்று மாலை பெய்த ஆலங்கட்டி மழையால் பவுரிங் வைத்தியசாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூருவில் கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பலத்த இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கிருஷ்ண ராஜபுரம், ராஜாஜி நகர், மெஜஸ்டிக், ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மாலை 7 மணி வரை கொட்டிய மழையால் ஆங்காங்கே சாலையோர மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்தன.
சிவாஜி நகரில் உள்ள பழமையான பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் சாலையோர கடைக்காரர்களும், மழைக்கு ஒதுங்கியவர்களும் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை முன்னெடுத்தனர்.
முதல்வர் சித்தராமையா மழை பெய்து கொண்டிருந்தபோதே சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் உரிய நிவாரணம் அறிவிக்கப்படும் என்றார்.





