ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் புத்தகங்கள் முடக்கம்: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!
“எனது புத்தகங்களைத் தடுத்து வைத்துள்ளமை அடிப்படை மனித உரிமை மீறலாகும்” என்று தெரிவித்து, ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் , யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்தியாவிலிருந்து எழுத்தாளர் தீபச்செல்வனின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஐந்து வகையான புத்தகங்களின் 360 பிரதிகள், கடந்த மார்ச் 18ஆம் திகதி முதல் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துக்கள் இப்புத்தகங்களில் உள்ளதாகத் தெரிவித்தே இவை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாகத் தீபச்செல்வன் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 17ஆம் திகதி கலாசார அமைச்சில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. எனது இலக்கியச் செயற்பாடுகள் மற்றும் புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்து அங்கு விளக்கமளித்தேன்.
சிங்கள மற்றும் தமிழ் எழுத்தாளர்கள், சட்டத்தரணிகள் எனப் பலரும் எனக்கு ஆதரவாகக் கலந்துகொண்டனர். இருப்பினும், புத்தகங்கள் எதற்காவ தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதற்கான தெளிவான காரணங்கள் இதுவரை கூறப்படவில்லை; தீர்வும் எட்டப்படவில்லை.” – என்றார்.
புத்தகத் தடுப்புக்கு நியாயம் கற்பிப்பதற்காக அரசு சில மூத்த சிங்கள எழுத்தாளர்களைப் பயன்படுத்துவதாகச் சாடிய அவர், “எனது புத்தகங்களை வாசிக்காமலேயே, அதில் நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படும் விடயங்கள் இருப்பதாக ஒரு சிங்கள எழுத்தாளர் கூறுவது வேடிக்கையானது. இதுவே அப்பட்டமான இனவாதமும் பாரபட்சமும் ஆகும்” என்று தெரிவித்தார்.
உடனடியாகத் தனது புத்தகங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே மனித உரிமை ஆணைக்குழுவை நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கள இளைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் பலரும் இத்தடுப்புக்கு எதிராகத் தமக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர் என்றும் தீபச்செல்வன் இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.





