ஈரான் கப்பலுக்கு இராஜதந்திர அழைப்பை விடுத்ததா இலங்கை?
ஈரானிய கடற்படைக் கப்பல்களுக்கு இராஜதந்திர மட்டத்திலான அழைப்பு விடுக்கப்படவில்லை என இலங்கை தெரிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது இலங்கைக்கான ஈரான் தூதுவர் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa மேற்கண்டவாறு கூறினார்.
“ இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், இலங்கை கடற்படைத் தளபதி விடுத்த கனிவான மற்றும் வாய்மொழி அழைப்பைத் தவிர, ஈரானியக் கப்பலான ஐஆர்ஐஎஸ் டேனா இலங்கை வருகை தருவதற்கு எந்தவொரு இராஜதந்திர மட்டத்திலான அழைப்பும் விடுக்கப்படவில்லை.
கடற்படைத் தளபதி விடுத்த அழைப்பு என்பது பொதுவாக, கடற்படைத் தளபதிகளால் விடுக்கப்படும் ஒரு வழக்கமான அழைப்புதான்.
இதுபோன்ற அழைப்புகள் எந்தவொரு நாட்டினாலும், நிகழ்வுகளில் விடுக்கப்படுகின்றன.
இத்தகைய நிகழ்வுகளில் வாய்மொழியாக விடுக்கப்படும் அழைப்புகளுக்கு இராஜதந்திர ரீதியாக எவ்வாறு பதிலளிக்கப்படுகிறது என்பதும் அனைவருக்கும் தெரியும்என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஈரானிய தூதுவரின் கருத்து குறித்த கேள்விக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், தேவைப்பட்டால் வெளியுறவு அமைச்சு பதிலளிக்கும் என்றும் அவர் கூறினார்.





