அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து : மக்கள் முடக்கம்!
அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணம் போர்ட் ஆர்தர் (Port Arthur) பகுதியில் அமைந்துள்ள பிரபல வலேரோ (Valero) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று காலை பயங்கரத் தீபப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த தீப்பரவல் சம்பவத்தைத் தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பல அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழும்பியதுடன், பிரதேசம் முழுவதும் கரும்புகையினால் சூழப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நிலைமையின் தீவிரத்தை கருத்திற் கொண்டு, நகரின் மேற்குப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும் (Shelter in place), மறு அறிவித்தல் வரும் வரை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் பொலிஸ் அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில்முறை வெப்பமூட்டி (Industrial heater) ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஷெரிப் ஜேனா ஸ்டீபன்ஸ் (Zena Stephens) ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மேலும் வலேரோ நிறுவனம் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், பணியிலிருந்த அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.





