இளம் சட்டத்தரணி மரணம்: யாழில் பெரும் சோகம்!
யாழ். வடமராட்சி, அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி சிவராசா நிகாஷ் (வயது 40) நேற்று மாரடைப்பால் திடீரெனக் காலமானார்.
இரட்டைக் குழந்தைகளின் தந்தையான இவரது மறைவு அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்தரணி நிகாஷ் நேற்று மாலை 5 மணியளவில் தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். இதன்போது, தனக்கு நெஞ்சுப் பகுதியில் ஒருவித அசௌகரியம் இருப்பதாகத் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு இஞ்சித் தேநீர் வழங்கப்பட்ட நிலையில், இரவு 7 மணியளவில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது.
உடனடியாக அவர் நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்த சட்டத்தரணி நிகாஷின் மனைவி, வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார்.
ஒரு திறமையான இளம் சட்டத்தரணியின் இந்தத் திடீர் மறைவு வடமராட்சி மற்றும் யாழ். சட்டத்தரணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





