” ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்திக்கு ஒன்றிணைவோம்”
ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்திக்கு அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று (11.03.2026) காலை நடைபெற்றது.
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர விசேடமாகப் பங்கேற்ற இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், எமது வடக்கு மாகாணத்தின் வளங்கள் இன்னமும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியை அடைவதற்கும் சகல திணைக்களங்களும் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவும் குறிப்பிட்டார்.
விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் நாளாந்தம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாண விவசாய உற்பத்திகளைப் பெறுமதிசேர் உற்பத்திகளாக மாற்றி ஏற்றுமதி செய்யும் செயன்முறைகளை பெருமளவு ஊக்குவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.





