வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் துறையினருக்கு அழைப்பு!
“வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தனியார் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இத்துறையை மேம்படுத்துவதற்குத் தனியார் துறையினருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும்.”
இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் N. Vedhanayakan தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாத்துறைப் பங்குதாரர்களுடன் இன்று புதன்கிழமை (11) காலை யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடாக எமக்குத் தற்போது ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி இங்கு வருகைதரவுள்ள சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளுக்கான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயவுள்ளார். இது எமக்குக் கிடைத்துள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
இத்திட்டங்களை முன்னெடுப்பதில் அரச திணைக்களங்கள் ஆற்ற வேண்டிய வகிபாகத்தையும், தனியார் துறையினராகிய உங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நாம் முழுமையாக உணர்ந்துள்ளோம்.” எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை, தற்போதைய நிலையில் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடான வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றன. அதன் ஓடுபாதையை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது.
அதேபோல, காங்கேசன்துறை துறைமுகமானது இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வெகுவிரைவில் புனரமைக்கப்படவுள்ளது.
எமது சுற்றுலாத்துறை எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான நீண்ட பயண நேரம் காணப்படுகின்றது.
தரைவழிப் போக்குவரத்துக்கு 8 தொடக்கம் 9 மணித்தியாலங்கள் வரை தேவைப்படுகின்றன.” எனவும் வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டினார்.





