வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
வவுனியா, பறங்கியாற்றுப் பகுதியில் 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பறங்கியாற்றுப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை வேளையில் பறங்கியாற்றுப் பகுதிக்குச் சென்ற மேற்படி நபர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். இதன்போது, ஆற்றினுள் மேற்படி நபர் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது.
இந்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்துப் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, இப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமாகப் பொருத்தப்படும் மின்சாரக் கம்பிகளில் சிக்கி இவர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சடலம் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடற்கூற்றுப் பரிசோதனைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




