சுவிஸ் தூதரக சந்திப்பை குழப்பியது யார்? கஜேந்திரகுமார் விளக்கம்!
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவிருந்த சந்திப்புக்கு தமது கட்சியே இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Gajendrakumar Ponnambalam நிராகரித்துள்ளார்.
யாழிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை நிராகரித்தார்.
“தமிழ் தேசியப் பேரவையின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 15ஆம் திகதி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
வடக்கு கிழக்கை மையப்படுத்திய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியாகவே இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்காரணமாகவே சுவிஸ் அரசாங்கத்தால் எதிர்வரும் 19 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்ட பேச்சுவார்த்தை முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இது முற்றிலும் தவறானது.” – எனவும் கஜேந்திரகுமார பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சுவிஸ் தூதரகத்தை தொடர்புகொண்டு 19ஆம் திகதி இடம்பெறவிருந்த கூட்டம் கைவிடப்பட்டுள்ளதா எனவும், தமிழ் தேசியப் பேரவை 15ஆம் நாள் நடத்தவுள்ள கூட்டம் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டப்பட்டதா? எனவும் வினவினேன்.
அதனை சுவிஸ் தூதரகம் முற்று முழுவதாக மறுத்தது. தாங்கள் அந்த முயற்சியை கைவிடவில்லை என்றும், கூறியிருந்தது.
19ஆம் திகதி சந்திப்புக்கு நாங்கள் எந்த விதத்திலும் இடையூறாக இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியே இந்த முயற்சிக்கு தடை ஏற்படுத்தியுள்ளது.
திட்டமிட்டு இந்த இரு கூட்டங்களையும் சிக்கலுக்குள்ளாக்கி பொய்யான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு தமிழ் அரசுக் கட்சி செய்த சதியாகவே நாங்கள் இதனைக் கருதுகிறோம்.
19ஆம் திகதி கூட்டம் அவசியமில்லை என்றால் 15ஆம் திகதி கூட்டத்துக்கு தமிழ் அரசுக் கட்சி கட்டாயம் வரவேண்டும் என்றும் கஜேந்திரகுமார் அழைப்பு விடுத்தார்.





