வளர்ந்த இந்தியாவை நோக்கி நாடு வேகமாக பயணிக்கிறது – மாநிலங்களவையில் மோடி கருத்து
இந்தியா பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது என தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி வளர்ந்த இந்தியாவை நோக்கி நாடு வேகமாக பயணிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு கடந்த ஜனவரி 28 ஆம் திகதி , நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துவதை தவிர்த்துவிட்டார்.
இதனையடுத்து, பிரதமர் மோடியின் பதில் உரை இல்லாமல் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் நடத்தப்பட்ட விவாதத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
இங்கு கருத்து தெரிவித்த அவர்,
“குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில், நடுத்தர வர்க்கம், கீழ் நடுத்தர வர்க்கம், ஏழைகள், கிராமங்கள், விவசாயிகள், பெண்கள், அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். மேலும், இந்தியாவின் முன்னேற்றத்துக்கான ஒருங்கிணைந்த குரலை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளார்.
நாட்டின் இளைஞர்கள் இந்தியாவின் திறனை எவ்வாறு முன்னேற்றுகிறார்கள் என்பதை அவர் விரிவாக விவாதித்துள்ளார். ஒவ்வொரு பிரிவின் திறனையும் அவர் எடுத்துரைத்துள்ளார். இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இது நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது.
21 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டு முடிந்துவிட்டது, ஆனால் இந்த இரண்டாவது காலாண்டு கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் இரண்டாவது காலாண்டைப் போலவே தீர்க்கமானது. இந்த இரண்டாவது காலாண்டும் அதே அளவுக்கு சக்திவாய்ந்ததாகவும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி அதே வேகத்தில் முன்னேறும் என்பதையும் நான் தெளிவாகக் காண்கிறேன்.
இன்று, நாட்டின் ஒவ்வொரு நபரும் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளதாக உணர்கிறார்கள். இப்போது நாம் நிறுத்தவோ அல்லது திரும்பிப் பார்க்கவோ கூடாது. நாம் வேகமாக முன்னேறி, நமது இலக்குகளை அடைந்தாக வேண்டும். நாம் அந்த திசையில் நகர்கிறோம்” என்றார்.




