சுதந்திர தினத்தன்று வடக்கு கிழக்கில் கரி நாள் பேரணி – அனைவரும் பங்கேற்று வலுச்சேர்க்குமாறு யாழ் பல்கலை மாணவர்கள் அழைப்பு
சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இவ்வாறு அழைப்பு விடுத்தனர்.
மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்தனர்.
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 04 ம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், சில தினங்களாக அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.





