சுற்றுலா விசாக்களை விரைவாக செயற்படுத்துவது குறித்து ஆராய்வு!
வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்கு பிரவேசிக்கும் வாய்ப்பை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் அனுமதிப் பத்திரம் அறிமுகப்படுத்தும் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் சுற்றுலா விசாக்களை விரைவாகச் செயற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நாட்டில் உள்நாட்டு விமான சேவைகளை நெறிப்படுத்துதல், அவற்றில் நிலவும் சிக்கல்கள் குறித்தும், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு இடையில் பேருந்து சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரவாவி சுத்திகரிப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மீயாய்வு செய்யப்பட்டது.
மேலும், மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான விடுதிகளை சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பிலும் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சுற்றுலா பொலிஸாரின் உதவியுடன் எவ்வாறு தீர்க்க முடியும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
திமிங்கலங்களை பார்வையிடும் மையங்களில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.





