ஆதாரமின்றி 20 ஆண்டு சிறைவாசம்: அபு வழக்கில் பிரித்தானிய உளவுத்துறை சிக்கியது
குவாண்டானாமோ (Guantánamo Bay) சிறையில் வாடும் அபு சுபைதா (Abu Zubaydah) மீது நடத்தப்பட்ட கொடூர சித்திரவதைகளுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், பிரித்தானிய அரசு அவருக்குப் பாரிய தொகையை நஷ்டஈடாக வழங்கியுள்ளது.
நீதிமன்றத்திற்கு வெளியே இந்தச் சமரசம் எட்டப்பட்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் சி.ஐ.ஏ (CIA) இரகசிய சிறைகளில் 83 முறை ‘வாட்டர்போர்டிங்’ (waterboarding) சித்திரவதைக்கு உள்ளான இவரிடம், விசாரணை நடத்துவதற்கான கேள்விகளை பிரித்தானிய உளவுத்துறையான MI5 மற்றும் MI6 வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
அல்கொய்தா உறுப்பினர் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனத் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், 54 வயதான அவர் கடந்த 20 ஆண்டுகளாக எவ்விதக் குற்றச்சாட்டுகளுமின்றி சிறையில் உள்ளார்.
இந்த நஷ்டஈட்டை வரவேற்றுள்ள அவரது சட்டத்தரணிகள், பிரித்தானிய அரசு பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.





