திருமலையில் நேற்றிரவு ஏற்பட்ட குழப்பம் நாடாளுமன்றத்திலும் எதிரொலிப்பு!
திருகோணமலை கடற்கரையில் பௌத்த பிக்குகளால் அனுமதியின்றி விகாரை அமைக்க முற்பட்டதால் அங்கு நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளித்தார்.
“திருகோணமலையில் அசம்பாவிதம் ஏற்பட இடமளிக்க முடியாது: சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” எனவும் அவர் கூறினார்.
“திருகோணமலை, சம்புத்த ஜயந்தி விகாரை தொடர்பில் நேற்றிரவு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முற்பட்டவேளை இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய பொலிஸார் செயற்பட ஆரம்பித்தனர்.
குழப்பம் ஏற்பட்டால் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படக்கூடும் என தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பொலிஸார் சிலையை அங்கிருந்து அகற்றி, சிலைக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.” எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த புத்தர் சிலையை விகாரையிலேயே மீள வைக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை, அப்பகுதியில் சட்டவிரோதமாக சிற்றுண்டிச்சாலையொன்று நடத்தப்பட்டுவருகின்றது என கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர். நீதிமன்றம் வழங்கும் உத்தரவுக்கமையவே நடவடிக்கை எடுக்கப்படும்.
நேற்றிரவு நடந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு தகவல்கள் சமர்பிக்கப்படும். நீதிமன்றம் வழங்கும் உத்தரவுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும்.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் குறிப்பிட்டார்.





