வட இந்தியாவில் கனமழைக்குப் பிறகு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி -13 பேர் மாயம்

உத்தராகண்ட் மாநிலத்தில் மழையும் வெள்ளப்பெருக்கும் நின்றபாடில்லை. அங்கு அண்மைய வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 13 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடந்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மேகவெடிப்பு, நிலச்சரிவு, பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. உத்தராகண்டில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 16) மேகவெடிப்பால் அதிக மழை கொட்டியது. டேராடூன், சுற்றுப்பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு சிலர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, டேராடூனில் உள்ள ஒரு கல்வி நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்ததால், குழந்தைகளின் பெற்றோர் தவிப்புக்கு ஆளாகினர். எனினும், மீட்புக்குழுவினர் உரிய நேரத்தில் அங்கு வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கியதால் 200 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், பாலங்கள் மற்றும் அரசு சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய சில வாரங்களாக நீடித்து வரும் இயற்கைப் பேரிடர்களால் அங்குள்ள மக்கள் கண்ணீரிலும் தண்ணீரிலும் தத்தளிக்கின்றனர்.
இதனிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தையும் தொடர் மழை ஆட்டிப்படைத்து வருகிறது. அங்கு எட்டு மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய 120 பேர் மீட்கப்பட்டனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வீடு மொத்தமாக புதைந்தது. இருவர் மீட்கப்பட்ட நிலையில், மூன்று பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.