காஸா மக்களை குடியமர்த்த தெற்கு சூடானுடன் ஆலோசனை நடத்தும் இஸ்ரேல்

காஸா பகுதியில் தொடர்ந்து நடைபெறும் போர்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களை வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் மறுகுடியமாற்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் அரசு அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான தகவலின்படி, தற்போது வரை எந்த உத்தியோகப்பூர்வ உடன்பாடும் எட்டப்படவில்லை. கடந்த மாதம் இஸ்ரேலுக்கு வந்த தெற்கு சூடான் வெளியுறவுத் துறை அமைச்சர் மண்டே செமயா கும்பாவுடன் முதன்முறையாக இந்த விவகாரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த விவரத்தை தெற்கு சூடான் அரசாங்கம் ஆதாரமற்றது என மறுத்துள்ளது.
இஸ்ரேல் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாரன் ஹாஸ்கல், “பேச்சுவார்த்தை மனிதாபிமான நெருக்கடி மற்றும் இருநாட்டு உறவுகள் குறித்தது; மறுகுடியமாற்றம் குறித்து அல்ல,” எனத் தெரிவித்தார்.
ஆயினும், காஸாவை விட்டு வெளியேற விரும்பும் பாலஸ்தீனர்களுக்கான புதிய இடங்களை பற்றி சில நாடுகளுடன் பேச்சுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், காஸா மக்கள் அரசியல் மற்றும் இனவெறி வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானுக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும். பல அரபு நாடுகள், காஸா மக்களை வெளியேற்றும் திட்டங்களை தீவிரமாக எதிர்க்கின்றன.
இந்த முயற்சி மற்றொரு “நக்பா” ஆகும் என பாலஸ்தீனர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாலஸ்தீன விடுதலை இயக்கமும், அதிபர் மகமூத் அப்பாஸின் அலுவலகமும் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.