மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று லாடர்கில் பகுதியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சைம் அயூப் 57, ஃபகர் ஸமான் 28 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ஷமர் ஜோசப் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
179 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஜாண்சன் சார்லஸ் 35, ஜூவெல் ஆண்ட்ரூ 35, ஜேசன் ஹோல்டர் 30 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது நவாஸ் 3, சைம் அயூப் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
மக்காவ் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக் ஷயா சென், தருண் மன்னேபள்ளி ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினர். சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 47-ம் நிலை வீரரான இந்தியாவின் தருண் மன்னேபள்ளி 87-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹூ ஹியை 21-12, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன் னேறினார். மற்றொரு இந்திய வீரரான லக் ஷயா சென் 21-14, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜூவான் சென் ஹூவை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தார். இந்த ஆடடம் ஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்றது.