கேரளாவில் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று; மூன்று மாவட்டங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் இருவர் நிபா கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர், மல்லப்புரம் மாவட்டத்தையும் மற்றொருவர் பாலக்காடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.
மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான பரிசோதனையின்போது 2 பேருக்கு நிஃபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து இவர்களின் ரத்த மாதிரிகள் உடனடியாகப் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஒருவர், 38 வயது பெண். அவருடன் குறைந்தது 100 பேர் தொடர்பில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இரண்டாவது பாதிப்புச் சம்பவம், அண்மையில் உயிரிழந்த குழந்தையெனக் கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனையில் குழந்தைக்கு நிபா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேறு யாருக்காவது நிபா கிருமிப் பாதிப்புக்கான அறிகுறி உள்ளதா எனக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 26 சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், “நிபா வைரஸ் பரவலைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவற்றைப் பலப்படுத்தியுள்ளோம்,” என்று கூறியுள்ளார்.
“நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண காவல்துறையின் உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். மக்களுக்கு உதவ தொலைபேசி உதவி எண்கள் தொடங்கப்பட்டுள்ளன. அண்மைய வாரங்களில் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.