அணு ஆயுத திட்டத்தை ஈரான் மீண்டும் ஆரம்பித்தால் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை

அணு ஆயுத திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தால் ஈரானை தாக்குவோம், அந்த தாக்குதல் தற்போது நடந்ததைவிட மோசமானதாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்க விமானப்படைகள் குண்டு வீசி அழித்தன. அதன்பின், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் த ஹேக்கில் நடக்கும், ‘நேட்டோ’ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் மாநாட்டில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஈரானின் அணுசக்தி நிலையங்கள் எல்லாம் முழுதுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்று நான் நம்புகிறேன். அவர்களுக்கு அங்கிருந்து எதையும் எடுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தளவுக்கு அமெரிக்க படைகள் வேகமாக செயல்பட்டன.
ஈரானின் அணு ஆயுதத் திட்டம் முடிந்துவிட்டது. அவர்கள் அதை மீண்டும் உருவாக்க முயற்சித்தால், நாங்கள் மீண்டும் தாக்குவோம், அது இன்னும் மோசமாக இருக்கும். வெறுமனே போர் நிறுத்தம் வேண்டாம்; உண்மையான முடிவு வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.