எதிர்பார்ப்பை திடீரென மாற்றிய டிரம்ப்

ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை. அனைத்தும் முடிந்த வரை விரைவாக அமைதியாவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், இவ்வளவு குழப்பங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை.
அமைதியை நிலைநாட்ட ஈரான் விரும்புகிறது. அந்நாடு மட்டுமல்ல, இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அப்பட்டமாக மீறியிருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கை கடும் அதிருப்தி அளிக்கிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் அனைத்தும் உடனடியாக தங்களது விமான தளங்களுக்கு திரும்ப வேண்டும். ஈரான் மீது எந்த தாக்குதலும் நடத்தக் கூடாது. ஈரான் மக்களில் யாரும் பாதிக்கப்படக் கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், “ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதாக இருக்காது. ஆனால், தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் பதிவை வெளியிட்ட ஓரிரு தினங்களிலேயே ட்ரம்ப் இப்படி மாற்றி பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.