ஈரானின் உச்ச தலைவரை குறிவைத்தால் காத்திருக்கும் ஆபத்து – ஈராக் மதகுரு எச்சரிக்கை

ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேல் குறிவைப்பதற்கு எதிராக ஈராக்கின் ஷியா பிரிவின் மதகுரு அயதுல்லா அலி சிஸ்தானி எச்சரிக்கை விடுத்தார்.
ஈரான் – இஸ்ரேல் போர் முழு பிராந்தியத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அயதுல்லா அலி சிஸ்தானி வெளியிட்ட அறிக்கையில்,
ஈரானின் உச்ச மதத் தலைவரையும், அரசியல் தலைவரையும் குறிவைப்பது பிராந்தியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது பரவலான குழப்பத்தையும் தூண்டக்கூடும். இது பிராந்திய மக்களின் துன்பத்தை அதிகரித்து, அனைவரின் நலன்களுக்கும் கடுமையாக தீங்கு விளைவிக்கும்” என்று அவர் எச்சரித்தார்.
மேலும், “இந்த அநீதியான போரை முடிவுக்குக் கொண்டு வந்து ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு அமைதியான தீர்வைக் காண அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்” என்று சர்வதேச சமூகத்தை சிஸ்தானி வலியுறுத்தினார். ஈராக்கில் உள்ள கோடிக்கணக்கான ஷியா முஸ்லிம்களுக்கான மிக உயர்ந்த மதத் தலைவராக அயதுல்லா அலி சிஸ்தானி உள்ளார். ஈராக்கில் உள்ள பெரும் பகுதி மக்களை அணி திரட்டும் அதிகாரம் அவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.