அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5% வரி – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய சட்டமூலத்தை ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது.
இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
அவர்களை வெளியேற்ற ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் ‘தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்’ என்ற புதிய சட்டமூலத்தை ட்ரம்ப் நிர்வாகம் வரையறுத்து உள்ளது. இதில் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக, அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று புதிய சட்டமூலத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்காரணமாக கிரீன் கார்டு மற்றும் எச்1பி, எச்2ஏ, எச்2பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.