ரஷ்யா-உக்ரைன் இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள டிரம்ப் ; பொருளாதாரத் தடைகள் குறித்து எச்சரிக்கை

அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில் ரஷ்யா- உக்ரேன் இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் நாட்டின்மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் வியாழக்கிழமையன்று (மே 8) வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் எச்சரித்துள்ளார்.
“அமெரிக்க அதிபராக, ஐரோப்பியர்களுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையில் அமைதியைக் கொண்டுவர நான் உறுதியாக இருப்பேன். அது ஒரு நீடித்த அமைதியாக இருக்கும்,” என்று திரு டிரம்ப் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, 30 நாள் போர் நிறுத்தத்திற்கு உக்ரேன் இந்த நிமிடமே தயாராக இருப்பதாகத் திரு டிரம்ப்பிடம் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மேலும், வியாழக்கிழமையன்று (மே 8) அமெரிக்க அதிபருடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது திரு ஸெலன்ஸ்கி அவ்வாறு கூறியதாக அது சொன்னது.
நிபந்தனையற்ற போர்நிறுத்தத்துடன் தொடங்கி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது தயார்நிலையை ரஷ்யா வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனத் திரு ஸெலன்ஸ்கி தெரிவித்ததாக அது கூறியது.
இருப்பினும், திரு ஸெலன்ஸ்கியுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் விருப்பம் காட்டவில்லை.
மேலும், ரஷ்யா முழுமையாகக் கைப்பற்றாத உக்ரேனில் நான்கு பகுதிகளைக் கட்டுப்படுத்துவது உட்பட, சண்டையை நிறுத்த அதிகபட்ச கோரிக்கைகளை நிபந்தனையாகத் தொடர்ந்து திரு புட்டின் வலியுறுத்தி வருகிறார்