விரைவில் உக்ரேனுடன் கனிமவள ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடும் ; அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கா, உக்ரேனுக்கு இடையிலான அரிய கனிமவள ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அத்துடன், உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக தான் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல முறையில் முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் புட்டின் ஆகியோருடன் இந்த வாரம் நடத்திய பேச்சுவார்த்தை இங்கு நினைவுகூரத்தக்கது.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் முக்கியமான, இன்றிமையாத கனிமவளங்களின் உற்பத்தியைப் பெருக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.
“உக்ரேன், ரஷ்யா தொடர்பில் நாம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறோம். இதில் ஒரு முக்கிய நிகழ்வாக கூடிய விரைவில் உக்ரேனுடன் நாம் அரிய கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம்,” என்று அவர் விளக்கினார்.
டிரம்ப் இந்த வாரம் உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் ரஷ்ய அதிபர் புட்டின், உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்தப் பேச்சுவார்த்தை அவர் எதிர்பார்த்த 30 நாள் போர்நிறுத்த உடன்பாட்டை எட்டவில்லை. எனினும், அடுத்த 30 நாள்களுக்கு உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பை ரஷ்யா குறிவைத்து தாக்காது என புட்டின் கூறினார்.