தென்கொரிய அதிபர் யூனின் கைது ஆணையை ரத்து செய்த நீதிமன்றம்

தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலின் கைது ஆணையை அந்நாட்டு நீதிமன்றம் வெள்ளக்கிழமை (7) ரத்து செய்தது.இதன் மூலம் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதிபர் யூனைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க குறிப்பிட்ட சில காலம் வழங்கப்பட்டதாகவும் அந்த காலக்கெடு முடிந்த பிறகு அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதாகவும் நீதிமன்றம் கூறியது.
யூன் தொடர்பான வழக்கை இரண்டு வெவ்வேறு பிரிவுகள் விசாரித்தன.விசாரணை நடத்தப்பட்ட முறை சட்டத்துக்கு உட்பட்டதாக என்ற கேள்வி எழுந்துள்ளதை நீதிமன்றம் சுட்டியது.
தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்றதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டு அதிபர் யூன் ஜனவரி மாதம் 15ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார்.
அதிபர் யூன், பதவியில் இருக்கும்போது கைது செய்யப்பட்ட முதல் தென்கொரிய அதிபராவார்.அதிபர் யூனைக் கைது செய்யச் சென்ற அதிகாரிகளுக்கும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
“அதிபர் யூனின் கைது ஆணையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தென்கொரியாவில் சட்ட ஒழுங்கு இருப்பதை இது காட்டுகிறது,” என்று அதிபர் யூன்னின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதற்கிடையே, தீர்ப்பை எதிர்த்து அரசாங்க வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்பதால் யூன் உடனடியாக விடுவிக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
கைது ஆணை ரத்து செய்யப்பட்டபோதிலும் அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.