இந்தியா – அண்டை வீட்டிற்கு சென்றதால் மகளை துண்டு துண்டாக வெட்டி வீசிய தந்தை

உத்தரப்பிரதேசத்தில் தனது 5 வயது மகள் பக்கத்து வீட்டுக்குச் சென்றதால் ஆத்திரமடைந்த தந்தை, மகளை கொன்று துண்டு துண்டாக வெட்டிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்தவர் மோகித் மிஸ்ரா (40). இவரது மகள் தானி (5). கடந்த மாதம் 25ம் திகதி தானி காணாமல் போனதாக மோகித் மிஸ்ரா போலீசில் புகாரளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் 4 குழுக்கள் அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்கிருந்த வயலில் சிறுமியின் உடலின் ஒரு பகுதியை போலீசார் கண்டெடுத்தனர். தொடர்ந்து மறுநாள் உடலின் மற்ற பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறுமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்த சூழலில் மோகித் திடீரென காணாமல் போனார். அவரது குடும்ப உறுப்பினர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மீண்டும் வந்த மோகித்திடம் பொலிஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் மகளைக் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியதை ஒப்புக் கொண்டார்.
இது தொடர்பான விசாரணையில், “மோகித்தின் குடும்பத்தினர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராமுவின் குடும்பத்தினருடன் முன்பு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரு்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டனர். மோகித் தனது மகள் தானியிடம் ராமுவின் வீட்டிற்கு செல்வதை நிறுத்துமாறு பலமுறை கூறியுள்ளார். ஆனால் சிறுமி தினமும் அங்கு சென்று விளையாடி வந்துள்ளாள்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராமுவின் வீட்டிலிருந்து தனது மகள் வருவதைக் கண்ட மோகித் ஆத்திரமடைந்துள்ளார். உடனடியாக சிறுமியை பைக்கில் வைத்து ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற துணியால் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி வயலில் வீசியுள்ளார்” என்பது தெரிய வந்துள்ளது.