அமெரிக்காவை அடுத்து ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேறிய இஸ்ரேல்
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர், சமீபத்தில் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த வரிசையில் தற்போது ஐநாவின் முக்கிய அமைப்பான மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். மத்திய கிழக்கு போரில் ஐநா மனித உரிமை கவுன்சில் இஸ்ரேல் மீது பாரபட்சமாக நடந்துகொள்வதாக அந்நாடும் அமெரிக்காவும் விமர்சித்து வந்த நிலையில் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் முடிவால் மனித உரிமை கவுன்சிலுக்கு வரும் நிதி நின்று விடும் என்பதோடு பாலஸ்தீன அகதிகளுக்கும் நிதியுதவிகள் வெகுவாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐநாவின் கல்வி, அறிவியல் கலாசார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்குமாறும் அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவைத் தொடர்ந்து ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இஸ்ரேலும் விலகுவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கிதியோன் சார், “ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து விலகும் அதிபர் ட்ரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்துகொள்கிறது.
மேலும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) இஸ்ரேல் பங்கேற்காது. மனித உரிமைகளை மீறுபவர்களை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பாதுகாத்து அவர்களை ஒளிந்துகொள்ள அனுமதிப்பதன் மூலம், ஐநா மனித உரிமைகள் கவுன்சில் மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஜனநாயகமான இஸ்ரேலை அரக்கத்தனமாக சித்தரிக்கிறது. இந்த அமைப்பு மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, ஒரு ஜனநாயக நாட்டைத் தாக்குவதிலும், யூத விரோதத்தைப் பரப்புவதிலும் கவனம் செலுத்தியுள்ளது.
எங்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவது தெளிவாகத் தெரிகிறது. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில், இஸ்ரேல் மட்டுமே அதற்கென மட்டுமே உருவாக்கப்பட்ட தனி விதிகளை கொண்ட ஒரே நாடு. இஸ்ரேல் 100க்கும் மேற்பட்ட கண்டன தீர்மானங்களுக்கு உள்ளாகி உள்ளது. இது கவுன்சிலில் இதுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை. ஈரான், கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு எதிரானதைவிட அதிகம். இஸ்ரேல் இனி இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளாது” என அவர் பதிவிட்டுள்ளார்.