ரஜினி பட தயாரிப்பாளர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் திரையுலகம்
பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான கே.பி.சௌத்ரி கோவாவில் தற்கொலை செய்துகொண்டார். பொருளாதார நெருக்கடி, மன உளைச்சல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி. 44 வயதான இவர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர், புனேவில் உள்ள இந்திய விமானப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றினார்.
அந்த வேலையை விட்டுவிட்டு, 2016-ம் ஆண்டு திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். ரஜினியின் ‘கபாலி’ படத்தின் தெலுங்கு வெர்ஷனை தயாரித்தார்.
தொடர்ந்து, ‘சர்தார் கப்பர்சிங்’ மற்றும் ‘சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு’ ஆகிய தெலுங்கு படங்கள் மற்றும், ‘கணிதன்’ தமிழ் படத்தின் வினியோகஸ்தராகவும் இருந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு 93 கிராம் கோக்கைன் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்திருந்தது.
பொருளாதார பிரச்சினை, மன உளைச்சலால் தவித்து வந்த சௌத்ரி கோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.