வித்தியாவின் படுகொலை வழக்கு – மேன்முறையீடுகளை விசாரிப்பதற்கு திகதி நிர்ணயம்
![](https://iftamil.com/wp-content/uploads/2024/01/New-Project-2024-01-09T172421.645-1280x700.webp)
புங்குடுதீவு வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.
அதன்போது, இந்த வழக்கு தொடர்பான சிங்கள மொழிபெயர்ப்பு பிரதிகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த மேன்முறையீட்டு மனுகளை எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் ஆயம் தீர்மானித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தவர்களில் ஏழுபேரைக் குற்றவாளிகளாக இனங்கண்ட யாழ்.மேல் நீதிமன்றம், அவர்களுக்கு, மரண தண்டனைத் தீர்ப்பளித்துள்ளது. மரண தண்டனையோடு, 30 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.