வட்டி வீத அதிகரிப்பு அச்சம்: சரிந்தது சர்வதேச பங்குச்சந்தை!
அமெரிக்க Federal Reserve வட்டி வீதங்களை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச பங்குச்சந்தைகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
குறிப்பாக, தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளைக் கொண்ட Nasdaq குறியீடு, 2025 ஏப்ரலுக்குப் பிறகான தனது மிகப்பெரிய ஒருநாள் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்புத் தரவுகள் எதிர்பாராத அளவிற்கு வலுவாக வெளிவந்ததைத் தொடர்ந்து, இந்த வருடத்தின் பங்குச்சந்தை லாபங்கள் நீடிக்காது என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை அவசரமாக விற்பனை செய்யத் தொடங்கினர்.
இதன் காரணமாக அமெரிக்காவின் பிரதான பங்குச்சந்தைகள் வார இறுதியில் நஷ்டத்தை எதிர்கொண்டன.
பணவீக்கம் தொடர்ந்து உயர்வாக இருக்கும் பின்னணியில், இந்த புதிய வேலைவாய்ப்புத் தரவுகள் காரணமாக, பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி வீதங்களை நீண்ட காலத்திற்கு உயர்வாகவே வைத்திருக்கும் என்ற பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் எழுந்துள்ளது.
பங்குச்சந்தை மட்டுமன்றி, Digital Assets சந்தையிலும் வெள்ளிக்கிழமை கடுமையான சரிவு ஏற்பட்டது.
முதலீட்டாளர்கள் அபாயம் அதிகம் கொண்ட சொத்துக்களை விற்க முற்பட்டதால், உலகின் முன்னணி கிரிப்டோகரன்சியான ‘பிட்காயின்’ (Bitcoin) மதிப்பும் பெருமளவில் சரிந்தது.
இந்த சந்தை சரிவு குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,
“பணவீக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நல்ல பொருளாதாரத் தரவுகள் வெளிவரும் போது சந்தை உயர வேண்டுமே தவிர, வீழ்ச்சியடையக் கூடாது என்பதை பங்குச்சந்தை விரைவில் புரிந்து கொள்ளும் என நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
அடுத்த வாரத்தில் தொழில்நுட்பம் மற்றும் அரசியல் சார்ந்த நகர்வுகள் முக்கியத்துவம் பெறவுள்ளன.
முன்னணி AI நிறுவனங்களின் தலைவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ள ஜனாதிபதி டிரம்ப், புதிய திட்டமொன்றை முன்வைக்கவுள்ளார்.
அதன்படி, அமெரிக்க அரசாங்கம் பொதுப் பங்குகளை அந்த நிறுவனங்களில் வாங்குவதன் மூலம், சாதாரண அமெரிக்கர்களும் ‘AI’ தொழில்நுட்பத்தின் வெற்றியில் இருந்து பலன்களைப் பெற வழிவகை செய்யப்படும் என டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





