மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம்!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த தங்களின் அதிநவீன MQ-1 Predator ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள ராணுவ ரேடார் மற்றும் ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கப் படைகள் அதிரடி குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அண்டை நாடான குவைத் மீது ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவற்றை வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்து அழித்ததாகவும் குவைத் ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த மோதல்களால் வளைகுடா பகுதியில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
“சர்வதேச வான்வெளியில் இயங்கிக் கொண்டிருந்த அமெரிக்காவின் எம்க்யூ-1 ட்ரோனை ஈரான் ஆக்கிரமிப்புத் தன்மையுடன் சுட்டு வீழ்த்தியது.
இதற்குப் பதிலடியாக, தெற்கு ஈரானில் உள்ள கொரூக் (Goruk) நகரம் மற்றும் கெஷ்ம் தீவில் (Qeshm Island) உள்ள ஈரானிய ரேடார் தளங்கள் மற்றும் ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் திட்டமிட்ட தற்காப்புத் தாக்குதல்களை நடத்தின” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் ஈரானின் சிரிக் தீவில் (Sirik Island) உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றை இலக்கு வைத்துத் தாக்கியதாக ஈரான் அரசு ஊடகமான IRNA செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகள் பயன்படுத்திய வான்படை தளம் ஒன்றை நோக்கி ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரான் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட நேரடி காட்சிகளில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்படுவதும், அந்த ஏவுகணைகளின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருப்பது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.




