கல்வி ரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை, பிரிட்டன் ஆராய்வு!
பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரிட்டன் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனைச் ( Bridget Phillipson) சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இதன்போது, நிறுவன ரீதியான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்தல், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் அவதானம் செலுத்தினர்.
அத்தோடு, இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையில் கல்வித் துறையில் நிலவும் நீண்டகால, வரலாற்று ரீதியான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி, மாணவர் பரிமாற்றம் (Student mobility), கூட்டு வேலைத்திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினராலும் கவனம் செலுத்தப்பட்டது.

செவ்னிங் புலமைப்பரிசில்கள் (Chevening Scholarships) மற்றும் பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டம் (Commonwealth Scholarship Scheme) போன்ற ஐக்கிய இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் தற்போது நடைமுறையில் இருந்துவருகின்ற வேலைத்திட்டங்களை இலங்கை பிரதமர் பாராட்டினார்.
இதன் மூலம் இலங்கையின் ஆளணித் திறனை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால மக்கள் தொடர்புகளை வளர்ப்பதற்கும் கிடைக்கப்பெறுகின்ற பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார்.






