வியட்நாம் புரட்சியாளர் ஹோ சிமின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் (To Lam), இன்று (08) முற்பகல் கொழும்பு பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதியை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவேற்றார்.
இதன்போது, இரு நாடுகளினதும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு வீதியின் இருமருங்கிலும் நின்றிருந்த சிறுவர்கள், வியட்நாம் ஜனாதிபதிக்குத் தமது மரியாதையைச் செலுத்தினர்.
ஹோ சி மின் (Ho Chi Minh) உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய வியட்நாம் ஜனாதிபதிக்கு, பாடசாலை மாணவர்களால் வரையப்பட்ட ஓவியங்களும் இங்கு கையளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு பொது நூலகத்தில் அமைந்துள்ள “வியட்நாம் – ஹோ சி மின் வளாகத்தை” (Vietnam-Ho Chi Minh Space) விரிவாக்கம் செய்யும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட வியட்நாம் ஜனாதிபதி, அங்கிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத் தொகுப்பைப் பார்வையிட்டார்.
சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசார், பிரதி மேயர் ஹேமந்த வீரகோன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




