முடிவுக்கு வரும் தருவாயில் ஈரான் போர்?
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த நீண்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் உறுதியான உடன்பாட்டை எட்டத் தவறிய போதிலும், ஈரான் போர் முடிவுக்கு வரும் தருவாயில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தற்போதைய இரண்டு வார கால போர் நிறுத்தம் ஏப்ரல் 21 அன்று முடிவடைய உள்ள நிலையில், இந்த வாரம் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்று ஈரான் உறுதியளிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையால் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன.
அணுவாயுத குற்றச்சாட்டை ஈரான் மறுத்து, தனது திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கானது என்று கூறியுள்ளது.
இதற்கடையே அமெரிக்கப் படைகள் திங்களன்று, ஹோர்முஸ் ஜலசந்தி உட்பட ஈரானியத் துறைமுகங்களை முற்றுகையிட்டன. இது ஈரானின் 90 சதவீத கடல் வர்த்தகத்தை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஈரான் இந்த முற்றுகையை “கடற்கொள்ளை” என்று கண்டித்துள்ளது. அதே நேரத்தில், நீடித்த மோதல் பொருளாதார மந்தநிலைக்கும் எரிசக்தி நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





