முழு இலங்கை மக்களையும் ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், இத்தாலிய காவல் படையில் (கராபினேரி) பணியாற்றிய முதல் மற்றும் ஒரே இலங்கை அதிகாரியான 27 வயதான ஷெஹான் பெர்னாண்டோ உயிரிழந்துள்ளார்.
இத்தாலியின் மிலான் நகரைச் சேர்ந்த ஷெஹான் பெர்னாண்டோ, அந்நாட்டின் காவல் படையில் ஒரு மரியாதைக்குரிய அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
தகவல்களின்படி, அவர் வசித்து வந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் சுடப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்ட பணித் துப்பாக்கியும் அவரது உடலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த துரதிர்ஷ்டவசமான மரணம் குறித்து இத்தாலிய பாதுகாப்புப் படைகள் ஏற்கனவே ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளன. மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், இது தற்கொலையாக இருக்கலாம் என்று பல இத்தாலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வர முடியாது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
வென்னப்புவ, தல்தேனவை பிறப்பிடமாக கொண்ட ஷெஹான், சிறுவயது முதல் இத்தாலியில் வசித்து வந்தார். மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன், அவர் இத்தாலிய பாதுகாப்புப் படைகளின் மதிப்புமிக்க ‘கரபினேரி’ படையில் சேர்ந்தார்.
அங்கு பணியாற்றிய முதல் இலங்கையர் இவரே ஆவார். அவர் தனது பணியிடத்திலும், இத்தாலியில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரிடையேயும் மிகவும் மதிக்கப்பட்ட ஒருவராகத் திகழ்ந்தார்.
அவரது பெற்றோரும் இத்தாலியில் வசித்து வருகின்றனர், அவர்களும் தங்கள் மகனின் இழப்பால் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷெஹான் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு இத்தாலியின் மிலான் நகரில் நாளை (27ஆம் திகதி ) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.