இலங்கைக்கு தோள்கொடுக்க ஈரான் எப்போதும் தயார்!
இலங்கைக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு ஈரான் தயாராகவே இருக்கின்றது என்று அந்நாட்டு தூதுவர் Alireza Delkhosh தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“பிராந்திய நிகழ்வுகளால் தேவையான எண்ணெயைப் பெறுவதில் இலங்கை சிரமங்களை எதிர்கொண்டால், ஈரான் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்கும்.
ஹோர்முஸ் நீரிணை நட்பு நாடுகளுக்கு மூடப்படவில்லை, மேலும் நாங்கள் இலங்கைக்கு தேவையானவற்றை வழங்க எப்போதும் தயாராக இருக்கிறோம்.
இலங்கையானது ஈரானால் மிகவும் மதிக்கப்படுகிறது மற்றும் மரியாதைக்குரிய நாடாகும்.
ஜனாதிபதி அண்மையில் நடத்திய இப்தார் விருந்து நிகழ்வில் நான் கலந்து கொள்ளாததற்கு எந்த ஒரு சிறப்பு காரணமும் இல்லை.
நான் இங்கு கூடியிருந்த எமது மாலுமிகள் மற்றும் பயிற்சி மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தேன். மேலும் பொதுச் சட்டப் பொறுப்புகளுக்கு இணங்கவே நான் அவர்களுடன் இருந்தேன்.
அதனால்தான் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. இதில் எந்தப் புறக்கணிப்போ அல்லது அரசியல் காரணமோ சம்பந்தப்படவில்லை.” எனவும் ஈரான் தூதுவர் குறிப்பிட்டார்.





