போர் வியூகத்தை மாற்றுகிறார் ட்ரம்ப்: மத்திய கிழக்கில் நடக்கப்போவது என்ன?
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
இதற்கமைய ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு மற்றும் ஈரானின் கர்க் தீவு எண்ணெய் மையத்தை கைப்பற்றல் போன்ற நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான கூடுதல் படையினரை களமிறக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் ஆலோசித்துவருகின்றார் எனக் கூறப்படுகின்றது.
ஈரான் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை கைப்பற்றுவதற்குரிய திட்டமும் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தரை வழி தாக்குதலுக்கு படையினரை களமிறங்குவதற்கு முன்னர் ட்ரம்ப் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார். தற்போது அம்முடிவை அவர் மாற்றும்பட்சத்தில் அவருக்கு அரசியல் ரீதியிலான நெருக்கடி ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகின்றது.
ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் கடற்படைப் பிரிவுகளை இலக்கு வைத்து அமெரிக்கா தற்போது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஈரானின் அணு ஆயுத பலத்தையும் பிராந்திய ஆதிக்கத்தையும் முழுமையாக அழிப்பதே ஆபரேஷன் எபிக் பியூரியின் முக்கிய நோக்கமாகும் என அமெரிக்கா, இஸ்ரேல் என்பன தெரிவித்துள்ளன.





