கட்சி தாவும் படலம் தொடர்கிறது: அ.தி.மு.கவில் இணைந்தார் காளியம்மாள்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பில் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுவருகின்றது. மறுபுறத்தில் கட்சி தாவும் படலமும் தொடர்கின்றது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் Kaliammal, எடப்பாடி பழனிசாமி Edappadi Palaniswami முன்னிலையில் இன்று (13) அதிமுகவில் AIADMK இணைந்தார்.
அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படவுள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பி.காளியம்மாள். தன்னுடைய அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60,000 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார்.
“தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார்.
இந்நிலையில், இன்று காலை அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.





