இலங்கை செய்தி

154 கடவுச்சீட்டுகளுடன் பெண் ஒருவர் கைது

மோசடி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஊடாக, டுபாய், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக நபர்களைச் சேர்த்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளினால்  இந்த‌ பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, முல்லேரியா பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வீடொன்றில் இயங்கி வந்த இந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது, குறித்த நிறுவனத்தை நடத்தி வந்த உடமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 154 கடவுச்சீட்டுகள், வேலை ஒப்பந்தங்கள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் வேலை கோரும் விண்ணப்பங்கள், பல்வேறு நபர்களின் சுயவிபரக் கோவைகள் அடங்கிய கோப்புகள் என்பன அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பெண் இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டில் பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமத்தைப் பெற்று வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடத்தியுள்ளார். எனினும், அவருக்கு எதிராகப் பணியகத்திற்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய 11 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவரது உரிமம் இடைநிறுத்தப்பட்டிருந்தமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்தப் பெண்ணிற்கு எதிராக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட பெண்  கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!