பாலஸ்தீனத்திற்கு ஆதரவு – பிரித்தானிய தம்பதியினரை கருப்பு பட்டியலில் சேர்த்த இந்தியா!
பிரித்தானிய தம்பதியினரான லூயிஸ் கேப்ரியல் டி (Lewis Gabriel D) மற்றும் அனுஷி எம்மா கிறிஸ்டின் (Anushi Emma Christine) ஆகியோருக்கு “இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் புஷ்கரில் (Pushkar) பாலஸ்தீனத்தின் சுதந்திரத்தை வலியுறுத்தும் ஸ்டிக்கர்களை ஒட்டியதை தொடர்ந்து மேற்படி வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“சுதந்திர பாலஸ்தீனம். இஸ்ரேலை புறக்கணிக்கவும்” என்று எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் ஜனவரி 21 அன்று இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான இடமாக அறியப்படும் புஷ்கரில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாலஸ்தீன மக்களுக்காக வாதிடும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் இந்த தம்பதியினர் சுற்றுலா விசா தொடர்பான விதிகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றவியல் புலனாய்வுத் துறை உட்பட அதிகாரிகள், 2025 ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் அவர்களின் விசாக்களை ரத்து செய்ததுடன், அவர்கள் உடனடியாக வெளியேறுவதையும், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதையும் கட்டாயமாக்கியுள்ளனர்.





