உழவு இயந்திரம் மோதி பாடசாலை ஆசிரியர் உயிரிழப்பு!!
கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று (01) மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று பகல் சுமார் 12.00 மணியளவில் கிண்ணியா கற்குழி சந்திக்கு அருகில் வீதியோரமாக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மற்றுமொருவருடன் பேசிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வான் எல பகுதியில் இருந்து பெட்டியுடன் (Trailer) அதிவேகமாக வந்த உழவு இயந்திரம் (Tractor) கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் கிண்ணியா இடிமன் பகுதியைச் சேர்ந்த முகமது சாலிகின் முகமது மவுஜூத் (வயது 58) என்ற பாடசாலை ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உழவு இயந்திரத்தை ஓட்டி வந்த சாரதி கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக வான் எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த ஆசிரியரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





