தமிழகத்தில் முடங்கிய வங்கி சேவை – பெரும் சிரமத்தில் மக்கள்
தமிழ்நாட்டில் வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் வேலை நிறுத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த வேலை நிறுத்தில் சுமார் 08 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்ததால் தமிழ்நாட்டில் வங்கி சேவை இன்று கடுமையாக பாதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 16,000 வங்கிக் கிளைகள் இன்று செயல்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
ஏற்கனவே சனி, ஞாயிற்றுக்கிழமையோடு குடியரசு தினம் விடுமுறையும் சேர்ந்து 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து இன்று வங்கி ஊழியர்கள் போராட்டம் நடைபெற்றதால் 04 நாட்கள் வங்கிகள் செயல்படவில்லை.
இதனால் வங்கியில் பணத்தை செலுத்தவோ, எடுக்கவோ முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள் காசோலைகள், பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் முடங்கின.
தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள காசோலை இன்று ஒரு நாளில் முடங்கியதாக கூறப்படுகிறது. 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டு இருப்பதால் அந்நிய செலாவணி பரிமாற்றம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் இன்று செயல்படவில்லை.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் சார்பாக இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது. அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து கண்டன
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





