டிஜிட்டல் மயமாக்கல் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு!
டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பிலும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (19) முற்பகல் ஆராயப்பட்டுள்ளது.
இங்கு, நாணயத்தாள் அற்ற பொருளாதார (Cashless Economy) ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதன்படி, அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்தல், QR பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், Cloud உட்கட்டமைப்பு வசதிகள் மையத்தை நிறுவுதல் ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் அதிவேக பிரோட்பேண்ட் (BroadBand) வசதிகளை வழங்குவதற்கான தேசிய திட்டம், Single window வசதிகளை வழங்குதல், டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டம் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், போக்குவரத்து அபராதக் கட்டணம் செலுத்துதலை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் (Traffic Spot Fine) உட்பட இலங்கையில் நாணயத்தாள் அற்ற பொருளாதாரத்தை (Cashless Economy) ஊக்குவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள செயற்திட்டங்களின் முன்னேற்றம் ஆகியவை குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
கிராமப்புற மக்களின் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் முறைசாரா துறைகளாகவே உள்ளன என்றும் அந்த நடவடிக்கைகளை முறையாக ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கை CERT நிறுவனம், தரவுப் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRC) உள்ளிட்ட டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் செயல்திறன், முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்களும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.
மேலும், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட GovTech நிறுவனத்தின் தற்போதைய நிலை மற்றும் புதிய ஆட்சேர்ப்புகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.





