உலகம் செய்தி

கிரீன்லாந்து விவகாரம் -எதிர்ப்புத் தெரிவித்த நாடுகளுக்கு வரி விதிக்கப் போவதாக ட்ரம்ப்‌ எச்சரிக்கை

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது லட்சியத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகள் மீது வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள சுயாட்சி பிரதேசமான கிரீன்லாந்து தொடர்பாக சில நாடுகள் ஒத்துழைக்காவிட்டால், அவர்கள்மீது வரி விதிக்க வாய்ப்பு இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

இருப்பினும், எந்த நாடுகள் பாதிக்கப்படலாம் அல்லது இந்த வரிகளை விதிக்க எந்த சட்ட அதிகாரம் பயன்படுத்தப்படும் என்பதைக் குறித்து அவர் விபரிக்கவில்லை.

டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மட்டுமல்லாமல், பிற நாடுகளும் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அமெரிக்காவுக்குள்ளேயே கூட, கிரீன்லாந்தை கையகப்படுத்தும் எண்ணம் குறித்து பலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்க காங்கிரசைச் சேர்ந்த இரு கட்சியினரும் அடங்கிய குழு ஒன்று கிரீன்லாந்து சென்றது. அந்தப் பகுதியின் நிலைமையை நேரில் அறிந்து, உள்ளூர் தலைவர்களுடன் பேசுவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுவினர் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மற்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சனை சந்தித்தனர்.

அந்த குழுவின் தலைவர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் கிறிஸ் கூன்ஸ், உள்ளூர்வாசிகளின் கருத்துக்களை கேட்டு, பதற்றத்தை குறைக்கும் நோக்கில் அவற்றை வொஷிங்டனுக்கு கொண்டு செல்லும் முயற்சியே இந்தப் பயணம் என்றார்.

கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமானது என்றும், அதை “எளிதான வழியிலோ அல்லது கடினமான வழியிலோ” அமெரிக்கா பெறும் என்றும் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். இது தீவை வாங்குவதற்கான அல்லது வலுக்கட்டாயமாக கைப்பற்றும் யோசனைகளைக் குறிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.

வளங்கள் நிறைந்த கிரீன்லாந்து, அதன் புவியியல் இருப்பிடத்தின் காரணமாக பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்கு அமெரிக்கா ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளது.

டென்மார்க்குடன் உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில், கிரீன்லாந்தில் கூடுதல் துருப்புகளை நிறுத்த அமெரிக்காவிற்கு அனுமதி உள்ளது. இருப்பினும், தீவை அமெரிக்கா கைப்பற்றும் எந்த முயற்சியும் நேட்டோ கூட்டணிக்கு ஆபத்தாக அமையும் என டென்மார்க் எச்சரித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!