புடினின் இல்லம் மீதான தாக்குதல் சர்ச்சை – மோடியும் கவலை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லம் மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கவலை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வர தூதரக முயற்சிகளை தொடருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பகைமையை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை அடைய தற்போதைய தூதரக முயற்சிகளே மிகவும் சாத்தியமான வழி என்றும் தொடர்புடைய அனைவரும் இந்த முயற்சிகளில் கவனம் செலுத்துமாறும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, புடின் வீடு மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஃப்ளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ரஷ்ய ஜனாதிபதி புடினின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை யார் என்னிடம் சொன்னார்கள் தெரியுமா?.
புடினே என்னை தொலைபேசியில் அழைத்து இதனைத் தெரிவித்தார். இது நல்லதல்ல. நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். அதேவேளையில் இந்தச் செய்தி பொய்யாகவும் இருக்கலாம்.
தாக்குதல் நடக்காமல் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை தாக்குதல் உண்மையென்றால். அது நடந்திருக்க இது சரியான தருணம் இல்லை” என தெரிவித்தார்.
இதேவேளை,“உக்ரைனின் இந்த தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது, இந்த தாக்குதல் முயற்சி அரசு தீவிரவாதம் அன்று வேறென்ன? இதற்காக உக்ரைன் மீது எதிர் தாக்குதல் நடத்துவோம். அதற்கான இலக்குகளை தேர்ந்தெடுத்துவிட்டோம்” என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மேற்கே உள்ள நோவாகோரோட் பகுதியில் புடினின் வீடு உள்ளது. உக்ரைன் தொலைதூரம் சென்று ட்ரோன்களை ஏவி தாக்கியுள்ளதாக ரஷ்யா குற்றம் சுமத்துகிறது. புடினின் வீட்டைக் குறிவைத்து 91 ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ரஷ்யா குற்றம் சுமத்தியது.
எவ்வாறாயினும் இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கும் உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி, “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குழுவின் போர் நிறுத்த முயற்சியைக் குலைக்கவே ரஷ்யா இவ்வாறு குற்றம் சுமத்துகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.





