புலம்பெயர் இலங்கையர்களுக்கு நன்றி தெரிவிப்பு: சர்வதேச உதவி குறித்தும் விளக்கம்!
இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் வெளிப்படைத்தன்மையுடனேயே கையாளப்பட்டுவருகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க நிர்வாகப் பொறிமுறை ஊடாக உரிய வகையில் உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுவருகின்றன எனவும் அவர் கூறினார்.
இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் தொடர்பில் வெளிப்படைதன்மை இல்லை என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டு தொடர்பில் வெளிவிவகார அமைச்சரிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ பேரிடரின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச உதவிகள் கிடைக்க ஆரம்பித்தன. முதல் ஆறு மணி நேரத்துக்குள்ளேயே மீட்பு பணிக்குரிய உதவியை இந்தியா வழங்கியது.
பாகிஸ்தான், சீனா, நேபாளம் உட்பட அனைத்து நாடுகளும் உதவி வருகின்றன. இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் தமது பிரத்தியே நிதியைக்கூட வழங்கியுள்ளனர்.
தம்மால் முடிந்த வகையில் எமக்கு உதவி வழங்கிய சர்வதேச சமூகத்துக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
நெருக்கடினான நேரத்தில் நேசக்கரம் நீட்டிவரும் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.” எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நிவாரண பணியில் ஓரிரு குறைப்பாடுகள் இருக்கலாம். அதனை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த கட்டமைப்புமீது விமர்சனங்களை முன்வைப்பத ஏற்புடையது அல்ல.
விநியோக பொறிமுறை நீதியாக நடக்கின்றது. வெளிப்படையான அரசாங்க நிர்வாகப் பொறிமுறை உள்ளது என விஜித ஹேரத் மேலும் கூறினார்.





