மண்சரிவுகளின் எதிரொலி – இலங்கையின் மலைநாட்டு புவியியல் அமைப்பில் மாற்றம்?
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக இலங்கையின் மத்திய மலைநாட்டின் புவியியலில் அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் நிலப் பயன்பாட்டு வரைபடத் தொடரை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் என்.கே.யு.ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த 28,29,30ஆம் திகதிகளில் இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளி காரணமாக வரலாற்றில் மிகப்பெரிய இயற்கையின் கோரத்தாண்டவத்தை இலங்கை சந்தித்திருந்தது.
இந்த சூறாவளியால் இலங்கையின் மத்திய மலைநாட்டின் பகுதிகள் பெரும் அழிவை சந்தித்திருந்தன. நுவரெலியா, பதுளை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்தங்களாலும் நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளாலும் 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய மலைநாட்டின் புவியியல் அமைப்பின் வரைப்படத்தில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் என்.கே.யு.ரோஹன கூறியுள்ளதுடன், இந்த மறுவரை படமாக்கல் அவசியமாகியுள்ளதுடன், துல்லியமான மறுவரை படமாக்கல் செயல்முறையை ஆதரிக்கும் வகையில், இலங்கையைச் சுற்றிவரும் விண்வெளி நிலையங்களில் இருந்து உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களைப் பெற நில அளவைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய படங்கள், மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணவும், நதிப் படுகைகள், நிலங்கள் மற்றும் விவசாயப் பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும் உதவும். சேதம் பெரும்பாலும் புவியியல் நிலப்பரப்பில்தான் ஏற்பட்டுள்ளது. வெளிப்புறப் பகுதிகள் பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை. ஆனால் சில பகுதிகளில் மீள்குடியேற்றம் தேவைப்படலாம் என அவர் கூறியுள்ளார்.
அனர்த்த நிலை சீரடைந்து, ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், பாலங்கள், வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் பழுதுபார்ப்புப் பணிகள் முடிந்தவுடன், விரிவான செயற்கைக்கோள் படங்களைப் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





