நடிகை திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் சுட்டுக்கொலை

உத்தரப் பிரதேசத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் வெளியே துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளிகள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பரேலியில் உள்ள நடிகை திஷா பதானியின், வீட்டின் வெளியே செப்டம்பர் 12ம் திகதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதல் குறித்து, வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில்துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகள் ரோஹித் கோதாரா – கோல்டி பிரார் குழுவைச் சேர்ந்த ரவிந்திரா மற்றும் அருண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளிகள் இருவரையும் காசியாபாதின் ட்ரோனிகா நகரத்தில், நொய்டா சிறப்பு அதிரடிப் படை மற்றும் தில்லி காவல் துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
அப்போது அவர்கள் இருவரும் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் ரவிந்திரா மற்றும் அருண் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.