வரலாறு காணாத வேகத்தில் உருகும் பனிப்பாறைகள் – பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை!

அண்டார்டிகா கண்டத்தில் இருந்து பனிப்பாறைகள் வரலாறு காணாத வேகத்தில் உருகி வருவது விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது காலநிலை மாற்றத்தின் திருப்புமுனையாக இருக்கலாம் என்றும், இதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள், குறிப்பாக பைன் ஐலேண்ட் மற்றும் துவைட்டீஸ் ஆகிய பனிப்பாறைகள், அதிவேகமாக உருகி வருகின்றன என சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு பனிப்பாறைகளும் உலகிலேயே கடல் மட்ட உயர்வுக்கு அதிக பங்களிப்பை அளிக்கின்றன.
இந்த பனிப்பாறைகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை எட்டும்போது, அவற்றின் உருகும் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரிக்கும் என்றும், இது ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தி முழு அண்டார்டிகா கண்டத்தையும் உருகச் செய்யும் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த பனி உருகும் நிகழ்வு, உலகெங்கிலும் உள்ள கடலோர நகரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
அண்டார்டிகாவில் உள்ள அனைத்து பனிக்கட்டிகளும் உருகினால், உலக கடல் மட்டம் பல மீட்டர்கள் உயரக்கூடும். இது நியூயார்க், ஷாங்காய், மும்பை போன்ற பெரிய நகரங்களை மூழ்கடிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.