இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தானியர்கள் இருவர் சடலமாக மீட்பு

இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே சிதைந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இரு உடல்களும் ஜெய்சால்மர் மாவட்டத்தில் காணப்பட்டதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) தெரிவித்தது.
15 வயது சிறுமியின் சடலம் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டையுடன் காணப்பட்டதாக அவர்கள் கூறினர். மற்றொரு சடலம் இளையர் ஒருவருடையது.
அவர் 18 வயது ரவிக்குமார் என்பதற்கான அடையாள அட்டையும் பாகிஸ்தான் சிம் அட்டையும் சடலம் அருகே காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.அவ்விருவரும் ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு முன்பு இறந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
சனிக்கிழமை மீட்கப்பட்ட இரு உடல்களும் இரு நாடுகளின் அனைத்துலக எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் கிட்டத்தட்ட 10-12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாதேவாலா பகுதியில் கிடந்தன.
சிறுமியும் இளையரும் இந்தியக் குடிமக்களா அல்லது பாகிஸ்தானியர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இரு சடலங்களும் ராம்கர் சமூக சுகாதார சடலப் பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டன. உடற்கூராய்வுக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என காவல்துறை அதிகாரி சுதிர் சவுத்ரி கூறியுள்ளார்.